2 வருஷமா சைலண்ட்… மதிமுக திமுகவுடன் இணைப்பா..? திருப்பூர் துரைசாமிக்கு வைகோ கொடுத்த பதில்..!!

Author: Babu Lakshmanan
1 May 2023, 12:57 pm
Quick Share

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற திருப்பூர் துரைசாமியின் கடிதத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

ஆளும் திமுகவுடன் வைகோவின் மதிமுக கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுடன் இணைந்தே போட்டியிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதிமுகவின் தலைமை பொறுப்பில் வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார்.

வாரிசு அரசியலை எதிர்த்து விட்டு திமுகவில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கிய வைகோ, தற்போது அதே வாரிசு அரசியலில் தனது கட்சியையும் ஈடுபடுத்திக் கொண்டது பொதுமக்களிடையே மட்டுமின்றி கட்சியினரியும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்த நிலையில, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று கூறி வைகோவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என்றும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது என வைகோவை கடுமையாக சாடியிருந்தார்.

இந்த கடிதம் ம.தி.மு.க.வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தாயகத்தில் இன்று நடந்த மேதின நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:- தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்கும் நோக்கம் இல்லை. திருப்பூர் துரைசாமியின் இணைப்பு கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

இனிமேல் அவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். 2 வருடங்களாக கட்சிக்கு வராமல் தற்போது அறிக்கை விடுத்திருப்பது எந்த நோக்கத்துடன் இருக்கும்? ம.தி.மு.க.வினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வந்தார். ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது, எனக் கூறினார்.

Views: - 272

0

0