ஆளுநர் ஆர்என் ரவி தமிழகத்திற்கு சாபக்கேடு.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல ; வைகோ கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 10:31 am
Quick Share

திருச்சி ; ஆளுநர் ஆர்என் ரவி தமிழகத்திற்கு சாபக்கேடு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக கழகம் ஊக்கம் வடிவம் கொண்டு வளர்ந்து வருகிறது. அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதிமுகவில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இது வரை இல்லாத துர்பாக்கியம், சாபக்கேடு தமிழகத்தில் ஆளுனர் ஆர்.என் ரவி. இல்லாத அதிகாரத்தை தானே எடுத்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை எதிர்த்து செயல்படுகிறார். இந்தியாவிற்கே வழி காட்டும் மாநிலமாக நம் தமிழகம் உள்ளது. எல்லோரும் பாராட்டும் நேரத்தில் ஆளுனர் உளறிக்கொண்டு உள்ளார்.

ஆளுனரின் எந்த வார்த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துத்துவ ஏஜெண்டாக அவர் செயல்பட்டால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம். தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லா விதமான யோசனையும் செய்து ஏற்படுத்தி உள்ளார். எது நல்லதோ அதை அவர் செய்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

நந்தினியை போல எல்லா மாணவிகளும் உருவாக வேண்டும். ஆளுனர் ஆளுனராக நடந்து கொள்ளவில்லை. அவர் ஒரு கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தாந்தோன்றிப் போக்கு சரியல்ல. ஆளுநர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல, எனக் கூறினார்.

Views: - 314

0

0