அண்ணாமலையின் சவாலை ஏற்க திமுக தயார் ; மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை ; அமைச்சர் சேகர்பாபு

Author: Babu Lakshmanan
21 December 2022, 3:28 pm
Quick Share

சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள திமுக தயார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாடி கைலாசநாதர் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர்கள் மீது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது வெளிப்படையான உலகம். இதில் எதையும், மறைத்து வாழ முடியாது. எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

எந்த நிலையிலும், எதையும் எதிர்கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. முதலமைச்சரை பொறுத்தளவில், இந்த திராவிட மாடல் ஆட்சியானது லஞ்ச லாவண்யத்திற்கு அப்பாற்பட்டு மக்களின் நலன் காக்கின்ற ஆட்சி நல்லதொரு ஆட்சியாக நடத்தி வருகிறார்.

இதுபோன்ற இடையூறுகள், தடைகளை எல்லாம் படிக்கட்டுகளாக்கி, தமிழகத்தை இந்திய திருநாட்டின் முதன்மையான மாநிலம் ஆக்கிட வேண்டுமென முதலமைச்சர் உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், என தெரிவித்துள்ளார்.

Views: - 294

0

0