கோவையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா..? அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 10:09 am
Quick Share

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்ததால், கோவை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவை காளப்பட்டி பகுதியில் நேற்று திமுக சார்பில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சரிடம் கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு தவிர்த்து அடுத்த ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தலாம் என மாவட்ட ஆட்சியர் மூலம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் நடைபெறுகிறது, என பதிலளித்துள்ளார்.

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உட்பட்ட இப்பகுதியில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். மேலும், இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியும், கோவை மாவட்டத்தில் நடைபெறும் போட்டியே ஆகும் என்பதால், கோவை மாவட்ட மக்கள், மாடுபிடி வீரர்கள் ஆகியோர் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பர்.

கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆண்டு கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாது என தற்போது தெரிவித்திருப்பது கோவை மக்களிடையேயும், மாடுபிடி வீரர்கள் இடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டதும், 900 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 301

0

0