கர்நாடகா தேர்தலில் பின்னடைவு.. திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம் ; முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட சபதம்..!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 4:17 pm
Modi Stalin - Updatenews360
Quick Share

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், 130க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது. அதேவேளையில், ஆளும் கட்சியாக இருந்த பாஜக 64 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!, என தெரிவித்துள்ளார்.

Views: - 288

0

0