முல்லைப் பெரியாறு அணையை திறந்தது யாரு…? தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் : ஓபிஎஸின் கேள்விக்கு பதில் சொல்லுமா தமிழக அரசு?
Author: Babu Lakshmanan30 October 2021, 1:32 pm
சென்னை : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக அரசின் இசைவுடன்தான் தண்ணீர் திறக்கப்பட்டதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சொல்லாததை செய்யும் திமுக
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீரை திறந்து விட்டிருப்பதையும், அப்போது தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் உடன் இருந்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்திருப்பதைப் பார்க்கும்போது சொல்லாததையும் தி.மு.க. அரசு செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.
அதாவது, ஆட்சி கட்டிலுக்கு வருவதற்கு முன்பு “உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்று சொன்ன தி.மு.க. இப்போது “உரிமைக்கும் கை கொடுப்போம்” என்ற நிலைக்கு வந்துவிட்டது.
தண்ணீர் திறப்பு
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரினைத் தேக்கிக் கொள்வதை தடுக்கும் நோக்கில், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையினை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு பாசன விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை 29-10-2021 நாளிட்ட எனது அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முற்றிலும் மாறான நடவடிக்கையை கேரள அரசு எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது.
கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கேரள வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அணை அருகே உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது மதகுகளிலிருந்து 514 கன அடி தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டிருப்பதாகவும், அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் உடனிருந்ததாகவும், அணை நிலவரம் குறித்து அடிக்கடி தெரிவிக்கும் வகையில் இரு மாநில அதிகாரிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்திகள்வந்துள்ளன.
ஆலோசித்தீர்களா..?
இதற்கு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கம் தேனி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில், கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை ஏற்கமுடியாது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் உரிமை பறிபோய் உள்ளதாகவும், கேரள அரசின் விதிமீறலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். கேரள அரசின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறப்பது இதுவே முதல்முறை என்றும், இது தமிழ்நாடு விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. மொத்தத்தில், தமிழ்நாட்டினுடைய உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது என்றே விவசாயிகள் கருதுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று நிபுணர்களும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டாத சூழ்நிலையில், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை தண்ணீர் சென்றடையாத நிலையில், கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் விவசாயிகளின் வினாவாக இருக்கிறது.
யார் திறந்தது…?
தமிழ்நாடு அரசினுடைய இசைவுடன் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதா அல்லது கேரள அரசு தன்னிச்சையாகவே திறந்துவிட்டதா; அப்படியென்றால் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஏன் கலந்து கொண்டார்கள்; தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்ற வினாக்களும் எழுகின்றன. இந்த வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது.
தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சனையான முல்லைப் பெரியாறு நதிநீர் பிரச்சனையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையை வெளிப்படையாக தமிழ்நாட்டு மக்களுக்கு, விவசாய பெருங்குடி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
0
0