பட்டாசு வெடிப்பதில் போட்டா போட்டி..கொலையில் முடிந்த இளைஞர்கள் தகராறு: கரூரில் கோவில் திருவிழாவில் நிகழ்ந்த விபரீதம்..!!

Author: Rajesh
23 March 2022, 9:46 am
Quick Share

கரூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மினி லாரி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – போலீசார் விசாரணை

கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்து உள்ளது பெரிய வள்ளிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா என்பதால் நேற்று இரவு கோவில் பின்புறம் அந்த ஊர் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தளவாபாளையத்தை சார்ந்த பிரபு என்கின்ற சண்முகம் என்பவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த பகுதியில் இருந்த பட்டாசுகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரபு என்கின்ற சண்முகத்திற்கும், அதே கிராமத்தை சார்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பாஸ்கர் அருகில் இருந்த தனது அம்மா வீட்டிற்கு சென்று அரிவாள் எடுத்து வந்து, பிரபு என்கின்ற சண்முகத்தை கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபு என்கின்ற சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது இருவரையும் விலக்கி விடச் சென்ற தளவாபாளையம் பிரபுவிக்கும் கையில் அரிவால் வெட்டு விழுந்தது. காயமடைந்த பிரபு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலையான பிரபு என்கின்ற சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 689

0

0