‘வச்ச செங்கல்லைக் கூட திருப்பி எடுத்துட்டு போயிட்டாங்க’; CM ஸ்டாலின் சொன்ன ஒன்னுமே நடக்கல… நரிக்குறவ பெண் அஸ்வினி வேதனை..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 1:57 pm
Quick Share

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை வந்து சேரவில்லை என்று நரிக்குற பெண் அஸ்வினி வேதனை தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி செங்கல்பட்டுவில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, “அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என நரிக்குறவ பெண்மணி அஸ்வினி கேள்வி எழுப்பிய காணொளி வைரலானது.

இந்த வீடியோ முதலமைச்சர் ஸ்டாலினின் பார்வைக்கு பட்ட நிலையில், அவர் நரிக்குறவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், வீடியோ மூலம் பிரபலமான நரிக்குற பெண் அஸ்வினியின் வீட்டுக்கே சென்று உணவருந்தினார். அப்போது, வீடு மற்றும் வங்கிக் கடன் செய்து தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. முதலமைச்சரின் இந்த செயல் பெரிதும் பாராட்டுக்குள்ளானது.

இந்த நிலையில், முதலமைச்சரால் நேரடியாக உதவி பெற்ற நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினி தற்போது, மீண்டும் வீதிவீதியாக பாசி விற்று வருகிறார். இது குறித்து பேசிய அவர், முதலமைச்சர் செய்வதாக சொன்ன எந்த உதவிகளும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று கூறி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பெண் கூறியதாவது :- எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் ஐயா வந்தாங்க 12 பேருக்கு தலா ஒரு லட்சத்துக்கான காசோலை கொடுத்தாங்க. இன்னமும் வரல. 30 பேருக்கு 10 ஆயிரம் லோன் தருவதா சொன்னாங்க. பட்டா, வீடு என நிறை சொன்னாங்க, ஆனால் எதுவுமே நடக்கவில்லை, ஒரு லட்சம் லோன் யாருக்கும் கொடுக்கவில்லை, ஒரு வருடம் ஆகிவிட்டது. கடை இருந்தா மட்டும் லோன் கொடுப்போம் என வங்கியில் கூறுகிறார்கள், இது தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசனை பார்த்தோம், அவர் மாவட்ட ஆட்சியரை பார்க்க சொன்னார். மாவட்ட ஆட்சியர் கடை கொடுக்கலாம் என கூறினார். விஏஓ வந்து பார்த்தார்கள் கடைகள் காலியாக இல்லையென கூறுகிறார்கள்.

மகாபலிபுரம் முழுவதும் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு என்ன ஒரு கடை கூட கிடையாது. வங்கியில் சேர்ந்து லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது, கழிவறை கட்ட வருவதற்கு கொண்டுவரப்பட்ட செங்கலை கூட எடுத்து சென்று விட்டார்கள், என வேதனையோடு தெரிவித்தார்.

அவர் பேசும் இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Views: - 532

0

0