பெண் வன்கொடுமை புகாரில் நீட் அனிதாவின் சகோதாரர் கைது… வசந்தியிடம் வம்பிழுத்ததால் சிறையில் அடைப்பு

Author: Babu Lakshmanan
17 February 2022, 9:46 am
Quick Share

அரியலூர் : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் முதல் பலி ஆவார். இவரது தற்கொலைக்கு பிறகுதான் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கையில் எடுத்தனர். தற்போது வரையிலும் நீட் தேர்வு ரத்து குறித்த வாக்குறுதி அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்து வருகிறது. ஆனால், இப்போதும் நீட் விவகாரம் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார் நகரில் தனது கணவர் அருண்குமாருடன் வசித்து வருபவர் வசந்தி (39). அதே பகுதியில்தான் அனிதாவின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். அந்தத் தெருவில் அனிதாவின் சகோதரர் அருண்குமார், பைக்கில் வேகமாகவும், தாறுமாறாகவும் வருவதாகவும் கூறப்படுகிறது. அப்போது, வசந்தியிடம் வம்பிழுத்ததாகவும் தெரிகிறது.

பின்னர், இது தொடர்பாக வசந்தி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் அருண்குமாரிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, கணவன், மனைவி இருவரையும் அருண்குமார் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 841

0

0