நீட் விவகாரம் : இடத்தச் சொல்லுங்க… சவாலுக்கு நான் ரெடி… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..!!

Author: Babu Lakshmanan
11 February 2022, 11:16 am
Quick Share

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்துவது பற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த சவாலை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்று பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி, தனிப்பெரும்பான்மையும் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன நிலையிலும் நீட் தேர்வை ரத்து செய்யாதது எதிர்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை எழச் செய்தள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், 2வது முறையாக மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நீட் தேர்வை கொண்டு வந்தது யார்..? என்ற விவாதம் திமுக – அதிமுகவினரிடையே காரசாரமாக நடைபெற்றது. திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக அதிமுகவும், பாஜகவும் ஆதாரத்தை கையில் வைத்துக் கொண்டே பேசி வருகின்றனர்.

இதனிடையே, நீட் தேர்வு குறித்து விவாதிக்க அதிமுக தயாரா..? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், நீட் விவகாரத்தில் முதலமைச்சர் அறிவிக்கும் பொதுவான இடத்தில் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பதிலளித்தள்ளார்.

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- நீட் தேர்வு குறித்து முதலமைச்சருடன் விவாதிக்க நானும், ஓ.பன்னீர்செல்வமும் தயார். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்ய தயாராக உள்ளோம். நீதிபதியாக இருந்து மக்கள் தீர்மானிக்கட்டும், எனக் கூறினார்.

நீட் விவகாரத்தில் அதிமுக – திமுக பரஸ்பரமாக குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் சவாலை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டிருப்பது இன்னும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 883

0

0