ஒரே நாளில் கூட்டணியை மாற்றிய ஜேடியூ… மீண்டும் இன்று முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்… பீகாரில் நடந்த கூத்து..!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 10:42 am
Quick Share

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பிற்பகல் மீண்டும் பதவியேற்கிறார்.

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது. இருப்பினும், இருகட்சிகளிடையே கடந்த நாட்களாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன.

இதனால், பாஜக சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அம்மாநில ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் கடிதம் அளித்தார். இதைத் தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணி முறிந்து விட்டதாகவும், ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

அதன்படி, பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும், மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார்.

இந்நிலையில், பாட்னாவில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்கிறார்.

இதனிடையே, நிதிஷ்குமார் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக பீகார் மாநில பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

Views: - 518

0

0