அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் முடியாது : பழனியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இபிஎஸ் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 9:59 am
EPS - Updatenews360
Quick Share

பழனிக்கு வருகைதந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்க அங்கு போடப்பட்டிருந்த மேடைக்கு வந்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்‌.

அப்போது அவர் பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணுகிறார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையுயையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம் எனவும்,அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு குடும்பம் கிடையாது, அவர்களுக்கு மக்கள்தான் குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர்.

ஆனால் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வரமுடியும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலையால் நீங்கள் இன்று ஸ்டாலின் தமிழக முதல்வராக உள்ளார்.

மக்களின் குறைகளை தீர்க்கவே ஸ்டாலினை முதல்வராக அமர வைத்துள்ளார்களே ஒழிய, மக்களை பலிவாங்க அல்ல என்றும்,நீங்கள் மக்களை மறந்தால் மக்கள் உங்களை மறப்பார்கள் என்பதை நினைவில் கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்றும் தெரிவித்தார்.

குடும்ப ஆட்சி நடைபெற்ற இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்து கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும் எனவும், தனது குடும்பத்தின் அதிகார மையங்களை கட்டுபடுத்த முடியாத முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும், இதேநிலை நீடித்தால் இலங்கையை போல தமிழகத்தில் உங்கள் குடும்பத்திற்கும் அதே நிலைதான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் கவலைபடாமல் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்தி கொண்டு உள்ளதாகவும், ஆட்சிக்கு வந்து 14மாதங்கள் ஆகியும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இதுவரை என்ன செய்தார் ஸ்டாலின் என்றும் கேள்வி எழுப்பினார்.

அனைத்து துறைகளிலும் லஞ்சம்.. திமுக அமைச்சர்களுக்குக காலை முதல் மாலை வரை லஞ்சம் வாங்கி கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்து பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள், உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் பயன்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டினார்.

ஆட்சியில் அதிமுக இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக என்றும், மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோதும் யாருமே சென்று மக்களை பார்க்கவில்லை என குற்றச்சாட்டினார்.

அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டார். அவருடன் இணைந்து அதிமுகவின் இருபெரும்‌ தலைவர்களுக்கும், அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ் என்றும், அதிமுகவினர் கோவிலாக எண்ணும் அதிமுக தலைமை அலுவலகத்தையும், அம்மா இருந்த அறையையும் காலால் உதைத்து ஈவு இரக்கமின்றி அங்குள்ள பொருட்களை சேதப்படுதியவர் ஓபிஎஸ் என்றும் அவர் உதைத்தது அலுவலகத்தை அல்ல, ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் உதைப்பதற்கு சமம் என்றும் தெரிவித்தார்.

திருட்டுத்தனமாக எடுத்த சென்ற ஆவணங்களையும்‌, பொருட்களையும்‌ மீட்டுத்தரமுடியாத அரசு திமுக அரசு என்றும், பலம் பொருந்திய அதிமுக விற்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என்றும், மக்கள் விரோத அரசு எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர் என்றும், 60அமாவாசைகளில் 14அமாவாசைகள் சென்றுவிட்டன என்றும், மீதமுள்ள 46அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எனவும் கூறினார்.
போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியாமல் இளைஞர்களும் மாணவர்களும் சீரழிகின்றனர். இதை கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின் நமது ஒத்துழைப்பு வேண்டும் என கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? என்றும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டுமென பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் தடைசெய்ய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை திமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் சரியாக வாதாடாமல் திறந்து விட்டுள்ளனர். ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக மக்களின் கருத்தை கேட்பதாக நாடகமாடுகிறார் ஸ்டாலின் எனவும், ஸ்டாலின் அரசு குழு அரசாங்கம்.

இதுவரை 38குழு அமைத்தும் இதுவரை எதுவுமே செய்யவில்லை. விரைவில் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும் என பேசினார். மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, பால்விலை என அனைத்தையும் ஏற்றி வாக்களித்த மக்களுக்கு அருமையான அற்புதமான பரிசை அளித்துள்ளார் ஸ்டாலின்.

மக்கள் வரும் காலங்களில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் எனவும் பேசினார். தொடர்ந்து அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று இரவு தங்கி நாளை அதிகாலை பழனி மலைக்கோவிலுக்கு சென்று விஸ்வரூப வேடத்தில் உள்ள முருகனை தரிசனம் செய்தபிறகு பழனியிலிருந்து சென்னை செல்ல உள்ளார்.

இந்நிகழ்ச்சியில்‌ திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Views: - 471

0

0