மழையில் தத்தளிக்கும் சென்னை: வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள்…மாநகராட்சி அறிவிப்பு..!!
Author: Aarthi Sivakumar7 November 2021, 10:15 am
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.
முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
1913, 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்ணிற்கு கால் செய்தும், 9445477205 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
0
0