ஓபிஎஸ்-க்கு அடி மேல் அடி… உரிமையியல் வழக்கிலும் பின்னடைவு… நீதிபதி பிறப்பித்த உத்தரவால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

Author: Babu Lakshmanan
3 March 2023, 8:14 pm
Quick Share

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக்கோரிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் கோரிக்கை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

2022ம் ஆண்டு ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நீக்கம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லியில் இருந்து வந்து ஆஜரான ஓபிஎஸ் தரப்பின் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணமூர்த்தி, கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு இல்லை. கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. கட்சியில் இருந்து நீக்கியது சட்ட விரோதமானது.

எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான அஜெண்டா பொதுக்குழு நிகழ்வில் இல்லை. பொதுச்செயலாளர் தீர்மானம் சட்டவிரோதமானது. ஒற்றை தலைமையை அடிப்படை தொண்டர்கள் கேட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எங்களை நீக்கியது இயற்கை நீதிக்கு எதிரானது. விளக்கம் கேட்காமல், பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை விதிக்க வேண்டும், என வாதாடினார்.

இதனை விசாரித்த நீதிபதி, எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறியதுடன், இடைக்கால பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Views: - 360

0

1