மருத்துவ சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்க வழிவகை செய்க : மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
15 April 2022, 7:34 pm
Stalin ops - updatenews360
Quick Share

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதி அடிப்படையில் வழங்கவும், மருத்துவ சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில்‌ உள்ள 37 அரசு மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ உள்ள கிட்டத்தட்ட 5,125 மருத்துவ இருக்கைகளில்‌, 15 விழுக்காடு இடங்கள்‌, அதாவது 769 இடங்கள்‌ அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகின்றன. இதேபோன்று ஒவ்வொரு மாநில அரசும்‌ அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை ஒதுக்குகின்றன. இந்த இடங்களை மாணவ, மாணவியருக்கு ஒதுக்கும்‌ பணியினை மத்திய சுகாதாரப்‌ பணிகள்‌ இயக்ககத்தின்‌ : கட்டுப்பாட்டில்‌ உள்ள மத்திய கலந்தாய்வுக்‌ குழு ஒவ்வொரு ஆண்டும்‌ மேற்கொண்டு வருகிறது.

இந்தக்‌ குழு 2021-2022 ஆம்‌ ஆண்டு கல்வியாண்டிற்கான நான்கு கலந்தாய்வுகளை முடித்த நிலையில்‌, மதுரை எய்ம்ஸ்‌ மருத்துவக்‌ கல்லூரிக்கான 15 மருத்துவ இடங்கள்‌, சென்னை மருத்துவக்‌ கல்லூரிக்கான இரண்டு இடங்கள்‌, சென்னை, ஸ்டான்லி மருத்துவக்‌ கல்லூரிக்கான ஐந்து இடங்கள்‌, ஓமந்தூரார்‌ மருத்துவக்‌ கல்லூரிக்கான ஓரிடம்‌ மற்றும்‌ கீழ்ப்பாக்கம்‌ மருத்துவக்‌ கல்லூரிக்கான ஒரிடம்‌ என 24 இடங்கள்‌ இன்னும்‌ அகில இந்திய ஒதுக்கீட்டின்‌ மூலம்‌ ஒதுக்கப்படாமல்‌ காலியாக உள்ளதாகவும்‌, இது தவிர சுயநிதிக்‌ கல்லூரிகளில்‌ உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கான சில இடங்கள்‌ நிரப்பப்படாமல்‌ உள்ளதாகவும்‌ தகவல்கள்‌ வருகின்றன.

பொதுவாக, இரண்டாவது கலந்தாய்வு முடிந்தவுடன்‌, மத்தியக்‌ கலந்தாய்வுக்‌ குழுவினால்‌ நிரப்பப்படாத மருத்துவ இடங்கள்‌ அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்‌ என்றும்‌, இருப்பினும்‌ இந்த ஆண்டு, மருத்துவச்‌ சேர்க்கைக்கான இறுதி நாள்‌ முடிந்த பிறகும்‌, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்‌ அடிப்படையில்‌, நிரப்பப்படாத இடங்கள்‌ அந்தந்த மாநிலங்களுக்கு இன்னமும்‌ திருப்பி அளிக்கப்படவில்லை என்றும்‌ கூறப்படுகிறது. இதன்மூலம்‌ சுயநிதிக்‌ கல்லூரிகளில்‌ உள்ள இருக்கைகள்‌ உட்பட கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மாணவ, மாணவியர்‌ மருத்துவம்‌ பயிலும்‌ வாய்ப்பு பறிபோய்‌ விடுமோ என்ற அச்சம்‌ நிலவுகிறது. அதிலும்‌ குறிப்பாக அரசு மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ நிரப்பப்படாமல்‌ உள்ள 24 மருத்துவ இருக்கைகள்‌ மற்றும்‌ சுயநிதி மருத்துவக்‌ கல்லூரி அரசு ஒதுக்கீட்டின்படி ஒதுக்கவிருக்கும்‌ 4 மருத்துவ இருக்கைகள்‌ தகுதியுடைய ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு கிடைக்காமல்‌ போகும்‌
சூழ்நிலை உருவாகியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டு, நான்கு கலந்தாய்வுகளுக்குப்‌ பின்பும்‌ நிரப்பப்படாமல்‌ இருக்கும்‌ நிலையில்‌, அந்த இருக்கைகளை மத்திய அரசிடம்‌ இருந்து திரும்பப்‌ பெற்று, அவற்றை தமிழ்நாட்டைச்‌ சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பு மருத்துவம்‌ பயில வேண்டுமென்ற ஆர்வம்‌ கொண்ட தகுதியுடையோர்‌ மத்தியில்‌ நிலவுகிறது.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுடன்‌ கலந்தாலோசித்து, அகில இந்திய ஒதுக்கீடு மூலம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும்‌, அவற்றை ப தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதியின்‌ அடிப்படையில்‌ வழங்கவும்‌, மருத்துவச்‌ சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும்‌ வழிவகை செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 756

0

0