ஓபிஎஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி.. காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 9:23 am
Ops - Updatenews360
Quick Share

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் அதிகபட்ச பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மட்டும் 2,314 பேருக்கு கொரோனா உறுதியாகியது. சென்னையில் 618 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்கும் விதமாக, மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த 12ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் இருதவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், சற்று உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக என தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காமராஜ் பிறந்தநாளில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தலைவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில், தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Views: - 1459

1

0