சபாநாயகரை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்த ஓபிஎஸ்.. அப்பாவு எழுப்பிய பதில் கேள்வியால் சட்டசபையில் கலகல!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 1:33 pm
Quick Share

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் போது ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டு வந்தது. அப்போது, இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, சபாநாயகர் ஓ.பன்னீர்செல்வத்தை பேச அழைத்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை திமுக ஆதரிப்பதாகவும், அவரை வைத்து அதிமுகவில் சலசலப்பை உருவாக்க சபாநாயகர் முயற்சிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கான விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது, துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆவேசமாக சத்தம் போட்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் இதுபோன்று சத்தம் போடக் கூடாது என்று எச்சரித்தார்.

இதனிடையே, தனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.

அப்போது, பேசிய ஓபிஎஸ், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் இந்த சிறப்பு வாயந்த வரலாற்றுமிக்க சட்டமன்றத்தை நடத்துவதில் அவர் ஏற்கனவே ஆசிரியர் என்ற பணியை மேற்கொண்டு வருவதாகவும், சபாநாயகர் அப்பாவு சில நேரங்களில் கனிவான ஆசிரியராகவும், சில நேரங்களில் கண்டிப்பான ஆசிரியராகவும் இருப்பதாக கூறினார். இதை கேட்ட சபாநாயகர் அப்பாவு, அப்ப நீங்க துணை கேள்வி கேட்க வரலையா..? என நகைச்சுவையாக கூறினார். சபாநாயகரின் இந்தப் பேச்சால் சட்டசபையில் கலகலப்பு ஏற்பட்டது.

Views: - 240

0

0