கர்நாடகா தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ்… காய் நகர்த்தும் புகழேந்தி ; பாஜகவுடன் அடுத்தடுத்து நடத்தும் பேச்சுவார்த்தை… !

Author: Babu Lakshmanan
7 April 2023, 12:01 pm
Quick Share

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிடுவது குறித்து பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் கர்நாடகாவிற்கு வருகை தந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Karnataka Secretary - Updatenews360

குறிப்பாக, பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடி, ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

அதேபோல, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Ops - Updatenews360

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முற்றிலும் ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி மற்றும் ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 300

0

0