மீண்டும் மசோதா… ரொம்ப மகிழ்ச்சி.. இனியும் ஆளுநர் தாமதிக்கக் கூடாது : ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் அன்புமணி வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 1:46 pm
Quick Share

சென்னை : ஆன்லைன் சூதாட்டத் தடை மீண்டும் நிறைவேற்றப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தார். இந்த சூழலில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படவிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. சட்டமுன்வரைவு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது!

பா.ம.கவின் வலியுறுத்தலை ஏற்று சட்ட முன்வரைவை அரசு மீண்டும் தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சட்ட முன்வரைவுக்கு தமிழக ஆளுனர் தாமதிக்காமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!, என தெரிவித்துள்ளார்.

Views: - 259

0

0