முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த செயல் தமிழகத்திற்கு பேராபத்து… தமிழர்களுக்கும் நல்லதல்ல… பொன் ராதாகிருஷ்ணன் வார்னிங்!!

Author: Babu Lakshmanan
23 May 2022, 4:31 pm
Quick Share

நாகர்கோவில் : பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டியணைத்தது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பின்னர் தமிழகத்தில் இடம் இல்லை என்று கூறினார். அதேப்போன்று ஓராண்டிற்கு பின் தற்போது தமிழகத்தில் பணம் இல்லை என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கூறியுள்ளார். இது பழைய தேர்தல் அறிக்கையை நினைவு படுத்துகிறது.

இனி நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு தான், அமைச்சர் என்பது தனக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்ததாக கூறுவார். பேரறிவாளன் விசயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு எடுத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வரின் கட்டி அணைப்பு முடிவு தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல. இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம், என்று கூறினார்.

மேலும், தமிழக அமைச்சரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், “ஒவ்வொரு வீட்டிற்கும் 15 லட்ச ரூபாய் கொடுக்கும் அளவிற்கு கருப்பு பணம் உள்ளது என கூறியவர் பிரதமர் மோடி. 15 லட்ச ரூபாய் கொடுப்பேன் என்று கூறியவர் ராகுல் காந்தி. எனவே, அந்த பணத்தை காங்கிரஸ் கட்சி கொடுக்கட்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சரின் போலீஸ் தலையீடு காரணமாக மீண்டும் மத ரீதியான பிரச்சனை ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது, என்று கூறினார்.

Views: - 1349

0

0