ரூ.2,400 கோடி கடன் வாங்க பேருந்துகளை தனியார் மயமாக்குவதா..? இதை ஏற்றுக்க முடியாது… தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 5:05 pm
Quick Share

திருவள்ளூர் ; ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் காலத் தாழ்த்தி திருப்பி அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் 18 உயிர்கள் பறிபோய் உள்ளதற்கு முழு காரணம் தமிழக ஆளுநர் தான் என்று குற்றச்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருத்தணி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் திருத்தணி பழைய கமலா தியேட்டர் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் துணை தலைவர் டாக்டர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அவருக்கு ஆள் உயர மாலை மற்றும் வெள்ளிவேல் பரிசளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்ட மேடையில் பேசியதாவது :- இன்று உலக மகளிர் தினம் அனைத்து மகளிர் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். மனநிறைவோடு மன மகிழ்ச்சியோடு இந்த நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், தமிழகத்தில் 3.5 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளீர்கள். நீங்கள் அனைவரும் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடும் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். யார் டாஸ்மார்க் கடையை மூடுவார்கள் என்று உங்களுக்கு தெரியும்.

கட்சியோ, மொழி ஜாதியோ பார்க்காமல் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை யார் மூடுவார்கள் என்று உங்களுக்குத் தெரியும், பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டுமென்று ஒற்றுமையாக இருந்து போராடினீர்கள். ஆனால் தமிழகத்தில் இந்த டாஸ்மாக் கடையை மூட அனைவரும் ஒற்றுமையாக போராடுங்கள். உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். பாட்டாளி மக்கள் கட்சியை பார்த்தால் ஒரு அச்சம். ஏனென்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடி விடுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

நாம் தற்போது எங்கு இருக்கிறோம். திருத்தணியில் இருக்கிறோம். திருத்தணி முருகா என்று அழைக்கவா, கந்தா என்று அழைக்கவா, முத்துக்குமரா என்றழைக்கவா, திருத்தணி முருகா.. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நல்ல எண்ணங்களை கொடுங்கள், என்று பொதுக்கூட்ட மேடையில் முருகர் பாடலை பாடி வேண்டிக் கொண்டார் அன்புமணி ராமதாஸ்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :- ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டு 142 நாட்கள் இருக்கிறது. தமிழக அரசிடம் சில விளக்கங்களை தமிழக ஆளுநர் கேட்டார். இந்த மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். இந்த 142 நாட்கள் தமிழகத்தில் 18 பேர் ஆன்லைன் ரம்மி விளையாடி 18 உயிர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த 18 உயிர்கள் போனதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் தமிழக அரசு விளக்கங்களை கூறினார்கள்.

மேலும் 142 நாட்களுக்குப் பிறகு மீண்டும் விளக்கத்தைக் கேட்டுள்ளார். இதில் எங்களுக்கு புரியாத புதிர் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும். ஏன் இந்த தாமதம், எதனால் இந்த தாமதம். இந்த விளக்கத்தை நீங்கள் முன்பே கேட்டிருக்கலாம். இந்த 142 நாட்களில் 18 உயிர்கள் போய் உள்ளது. இதற்கு எவ்வளவு பெரிய குற்றம். இந்த 18 உயிர்கள் போனதற்கு முழு காரணம் ஆளுநர் தான். இந்த குற்றச்சாட்டை நான் மட்டுமே வைக்கவில்லை. தமிழக மக்களும் இதனை வைக்கின்றனர். இதில் 18 உயிர்கள் மட்டுமல்ல லட்சக்கணக்கான உயிர்களும் லட்சக்கணக்கான குடும்பங்களின் பிரச்சனையும் அடங்கியுள்ளது. தமிழக அரசு உடனடியாக ஆளுநர் கேட்ட விளக்கத்தை அளித்து உடனடியாக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் ஆளுநர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஆன்லைன் ரம்மி வழக்கு சம்பந்தமாக எங்கள் வழக்கறிஞர் பாலு அவர்கள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நாட உள்ளோம்.

தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் அதிக வெப்பம் வரக்கூடிய ஆண்டாக தற்பொழுது அமைய உள்ளது. இந்த பருவ நிலை மாற்றத்தால் நிபுணர்கள் கூறுகிறார்கள், இதற்கு வெப்ப தணிப்பு செயல்திட்டம் தமிழக அரசு முன் வைக்க வேண்டும். இந்த மார்ச் இறுதிக்குள் பார்க்கப் போகிறீர்கள், 42,40 செல்சியஸ் வெப்பநிலை கடந்து ஏப்ரலில் 44 வரை வெப்பநிலை உயரும். இதற்கு என்ன செய்ய வேண்டும். இந்த ஆண்டு மட்டுமல்ல, வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நீர் மேலாண்மை திட்டத்திற்கு மற்றும் நீர் பாசன திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 20000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

வடமாநில தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான். கடினமாக உழைக்கின்றவர்கள். இப்போது ஒரு சூழலில் அவர்கள் பல்வேறு வேலைகளை தமிழகத்தில் செய்து வருகிறார்கள். இதில் பல வேலைகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் செய்ய மறுக்கின்ற வேலைகளை வட மாநில தொழிலாளர்கள் செய்கின்றனர். வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நம் தமிழகத்தை சேர்ந்தவர்களும் வட மாநிலங்களில் பல்வேறு வேலைகளை செய்கின்றனர்.

ஆகையால் நம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தால், நம் தமிழ்த்தை சேர்ந்தவர்கள் வட மாநிலங்களில் பாதுகாப்பாக இருப்பார்கள். இல்லையென்றால் அவர்கள் நமக்கு பிரச்சினை கொடுப்பார்கள். இதற்கு ஒரு தீர்வு என்னவென்றால் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மற்றும் தொழில் நிறுவனங்களில், என்பது சதவீத விழுக்காடு தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டம் ஆந்திராவில் இருக்கிறது, தெலுங்கானாவில் இருக்கிறது, கர்நாடகாவில் இருக்கிறது. இந்த சட்டம் தேர்தல் அறிக்கையில் திமுக சொல்லி இருக்கிறார்கள். இன்னும் அவர்கள் இதனை கொண்டு வரவில்லை. இதனை அவசியம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதுபோல் பிரச்சனைகள் தமிழகத்தில் வராது. வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு கொடுங்கள் 20% வேலை வாய்ப்புகளை வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொடுங்கள்.

தமிழகம் தலைநகர் சென்னையில் ஆயிரம் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை திட்டத்தினை திட்டி இருக்கிறார்கள். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மேற்கொண்டு உள்ளார். இந்த திட்டம் தற்போது திட்டியதல்ல 2019 அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தார்கள். இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தவர்கள் தற்போது உள்ள அரசு 2021 நவம்பர் மாதம் கொடுத்துள்ளார்கள். இதன் மூலமாக உலக வங்கிய இடம் 2400 கோடி ரூபாய் கடன் பெறுவதாக கையெழுத்து. இதில் உலக வங்கியின் நிபந்தனை என்னவென்றால், சென்னையில் ஆயிரம் பேருந்துகள் தனியார் மயமாக்க வேண்டும். இதற்கு கையெழுத்து அரசு சார்பில் போடப்பட்டுள்ளது.

இதில் என்னவென்றால் போக்குவரத்து என்பது அரசின் கடமை, இந்த கடமையிலிருந்து தவறி தனியாரிடம் ஒப்படைப்பது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. கலைஞர் அவர்கள் தனியார் பேருந்துகளை அரசுடமையாக்கினார், இந்த நிலைப்பாட்டில் இருந்து வெளியில் வந்து தற்போதுள்ள திமுக அரசு, போக்குவரத்தை நாங்கள் தனியார் மயமாக்குவோம் என்பது கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

மாறாக சென்னையில் தற்போது அரசு பேருந்துகள் 3 ஆயிரத்து 500 இயங்கி வருகிறது. இதனை 7000 பேருந்துகளாக உயர்த்த வேண்டும். அத்தனை பேருந்துகளும் இலவசமாக இயங்க வேண்டும். அப்படி இயக்கினால் சென்னை மாநகரத்திற்கு பெரிய நன்மை ஏற்படும். அப்படி ஒரு எடுத்துக்காட்டாக ஏற்படும். அப்படி என்ன நன்மைகள் என்றால், இருசக்கர வாகனங்கள் குறையும். பள்ளிக்கு செல்பவர்கள் அரசு பேருந்து பயன்படுத்துவார்கள். 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கினால் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் பயன்பாட்டிற்கு இதனை பயன்படுத்தி கொள்வார்கள்.

சாலை தேய்மானங்கள் குறையும் மற்றும் சாலை விபத்துக்கள் குறையும். இறப்புகள் குறையும் மற்றும் காற்று மாசுபாடு குறையும். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் ரூபாய் 3000க்கு மிச்சப்படுத்தலாம். இதனால் சுற்றுலா அதிகமாகும், வேலை வாய்ப்புகள் அதிகமாகும். படிப்புகளுக்கு செல்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படித்துவிட்டு வரலாம். இதனால் அனைவருக்கும் நல்ல பயனாக இருக்கும். ஆனால் அரசுக்கு இதனால் செலவு ஆகும். இதனை அரசு ஈடுகட்டி விடலாம். காற்று மாசினால் சென்னையில் ஆண்டிற்கு 4000 பேர் இறப்பு ஏற்படுகிறது என்று ஒரு செய்தி இதெல்லாம் குறையும், இதனால் அரசு பேருந்துகளை அதிகப்படுத்தி வேண்டும். இதுதான் உண்மையான வளர்ச்சி, அப்படி இல்லாமல் நாங்கள் தனியாருக்கு தான் கொடுப்போம் என்றால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது, என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Views: - 310

0

0