கள்ளக்குறிச்சி வன்முறைக்கு அரசுதான் முழு பொறுப்பு… விசாரணை நடக்கும் போது பள்ளிக்கு தொடர்பில்லை என எப்படி சொல்லலாம்…? இபிஎஸ் சந்தேகம்!!

Author: Babu Lakshmanan
17 July 2022, 6:44 pm
Quick Share

சென்னை : கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாணவியின் உறவினர்கள் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினர். இந்த நிலையில், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளிக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள்போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரை தாக்கி பள்ளிக்குள் நுழைந்து, பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டடத்தை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர்.

போராட்டம் வன்முறையாக மாறியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், உரிய நேரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், அசம்பாவிதங்களை தடுத்திருக்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- மாணவி இறந்த செய்தி கேட்டு அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்; காவல்துறையோ, அரசாங்கமோ ஆறுதல் கூறவில்லை, மகளை இழந்து வாடுகின்ற தாய் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அரசாங்கம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் செயலிழந்திருப்பதாலும், நீதி கிடைக்காத காரணத்தினாலும் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.

இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான், 3 நாட்களாக நீதி கேட்டு போராடி வருகின்றனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது பள்ளிக்கு தொடர்பில்லை என காவல்துறை உயர் அதிகாரி எப்படி சொல்ல முடியும்?;
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது, எனக் கூறினார்.

Views: - 454

1

0