BYJUS நிறுவனத்திற்கு முதல்ல தடை போடுங்க… அப்பதான் சரியா இருக்கும்… புதிய கல்வி கொள்கை குறித்து கிருஷ்ணசாமி கருத்து…!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 2:50 pm
krishnasamy_updatenews360
Quick Share

பைஜூஸ் நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் வருகின்ற 16ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது சரியல்ல.

மத்திய அரசு கூறியதால்தான் சொத்து வரியை உயர்த்துகின்றோம் என மாநில அரசு கூறுவது நியாயமல்ல. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். தமிழக அரசு சொத்து வரி உயர்த்துவதை கைவிட வேண்டும். மேலும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது. அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.மாநில அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம்.

தமிழகத்தில் பயிற்சி நிறுவனங்கள் டியூசன் சென்டர்களை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். டியூஷன் சென்டர்கள் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை. மழலையர் பள்ளிகள் துவங்குவதற்கு கூட பல்வேறு விதிமுறைகள் இருக்கும் பொழுது, டியூசன் சென்டர்கள் உட்பட பயிற்சி வகுப்புகளை ஏன் வரையறை படுத்தவில்லை. உடனடியாக வரையறை படுத்த வேண்டும்.

மத்திய அரசுடன் இணைந்து தனியார் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான கோடி முதலீடு செய்து டியூஷன் சென்டர்கள் நடத்துவது புதிய கல்விக் கொள்கைக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி விட்டு பைஜூஸ் போன்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவது கல்வி கொள்கைக்கு எதிரானது.

112 மாவட்டங்களில் நிதி ஆயோக் பைஜுஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிப்பது மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கையை சிதறடிக்கும் செயல். எனவே மத்திய அரசு இதனை ரத்து செய்ய வேண்டும்.

இலங்கையில் அரசியல் ஸ்திரம்மற்ற சூழல் நிலவி வருகின்றது. அங்கு ஏழை, எளிய மக்கள் பட்டினி சாவு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதே சமயம் அங்கு பாகுபாடு இல்லாமல் மனித நேயத்துடன் உதவி செய்ய வேண்டும். தமிழக அரசு உதவி செய்யும் பொழுது இலங்கையில் தமிழர்களின் பகுதி மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் உதவிட வேண்டும், எனக் கூறினார்.

Views: - 839

0

0