ராமஜெயம் கொலை வழக்கு ; பிரபல ரவுடிகள் 12 பேர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்… உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்..!!

Author: Babu Lakshmanan
1 November 2022, 11:24 am
Quick Share

திருச்சி : ராமஜெயம் கொலை வழக்கு சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 12 பேர் திருச்சி சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புபுலன் விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில், இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு இடையே, தமிழக போலீசார் டிஜிபி உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் பிரபல ரவுடிகளில் முக்கியமான ரவுடிகளிடம் நெருக்கமான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 நபர்கள் கடைசி நாட்கள் முன்பு திருச்சியில் டிஜிபி ஷகில்அக்தர் முன்பு ஆஜராகினர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிரபல ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், மயிலாடுதுறை கலைவாணன் என 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது.

இவர்கள் அனைவரும் இன்று திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சிபிசிஐடி நீதிமன்றத்தில்
ஆஜர் ஆக உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்று இவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

இதில் மயிலாடுதுறை கலைவாணன் தவிர மற்ற அனைவரும் JM6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் அனைவரும் ஆஜராகி வருகின்றனர் சிபிசிடி துணை கண்காணிப்பாளர் மதன் மற்றும் அதிகாரிகள் விசாரணை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்படும் அனைவரும் விரைவில் பெங்களூரில் உள்ள உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Views: - 472

0

0