குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம்.. உடேன தடை செய்ய நடவடிக்கை எடுங்க : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
12 April 2022, 11:56 am
Quick Share

குற்றங்களின் பிறப்பிடமாக உருவெடுக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய கொடூரம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்!.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்!.

ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம். இது உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக பேருருவெடுக்கும்!.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 754

0

0