ரெண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப் போறாங்க.. இன்னும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றல ; திமுக மீது ஆர்.பி. உதயகுமார் சாடல்!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 8:53 am
Quick Share

தூத்துக்குடி ; எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தூத்துக்குடியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா, பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்த தின விழா, மற்றும் கழக 51வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி மதுரையில் 51 எழை, எளிய மக்களுக்கு நடைபெறும் சமத்துவ சமுதாய திருமணவிழா அழைப்பிதழை தெற்கு மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- ஒவ்வொரு ஆண்டும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த தினம் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா, பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பிறந்த தின விழா, மற்றும் கழக 51வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி மதுரையில் 51 எழை,எளிய மக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணவிழா கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.

இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறிய ஸ்டாலின், இன்று ஆளும் கட்சியாக இருக்கும் போது, ரூ. 1000 கூட கொடுக்க மனம் இல்லாமல், அதிலும் கரும்பு கூட கொடுக்க மனம் இல்லாமல், இரும்பு மனம் படைத்தவராக இருந்தார்.

எடப்பாடியார் குரல் கொடுத்த பிறகு தான் பொங்களுக்கு கரும்பு வழங்க அரசாணை வெளியிட்டுள்ளார். திமுக வெளியிட்ட 505 தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு தேவையான வாக்குறுதி நிறைவேற்றவில்லை, இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல மேதகு ஆளுநர் உரையில் கடந்த ஆண்டு கொடுத்ததையும், 110 விதியில் அறிவித்ததை இன்றும் நிறைவேற்றவில்லை.

இரண்டு நிதிநிலை அறிக்கை அவர்கள் தாக்கல் செய்கிறார்கள். வேளாண் துறைக்கு என்று ஒரு பட்ஜெட், நிதி நிலை அறிக்கை பட்ஜெட். அதில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மானிய கோரிக்கையில் அமைச்சர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. இப்படி ஏறத்தாழ 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட திட்டங்கள் அறிவிப்பு என்பது வெறும் அறிவிப்பாக உள்ளதை தவிர செயல் வடிவம் ஆகவில்லை.

அம்மாவின் திட்டங்கள் தாலிக்கு தங்கம்திட்டத்தை தொடங்கி, அம்மா மினி கிளினிக், அம்மா உப்பு, அம்மா குடிநீர் என இன்றைக்கு இப்படி மக்களுக்கு பயனுள்ள அம்மாவின் திட்டங்களை முடக்கி, அதுக்கு மூடு விழா காண்கிறார்கள்.

திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தோடு வீட்டிற்கு முன்பாக மதுவிலக்கு போராட்டம் செய்தார். இன்று அவர் நினைத்தால் பூரண மதுவிலக்கை செயல்படுத்த முடியும். ஆனால் அவர் இதுவரை செயல்படுத்த முன்வரவில்லை. எங்கு பார்த்தாலும் அனுமதி இல்லாமல் டாஸ்மார்க் கடைகள் இயங்குவதாக பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆங்காங்கே நடைபெறும் போராட்டத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்து ஆடுகிறது. இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மதுபானகடைகள் அரசின் அனுமதி இல்லாமல் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மக்கள் இந்த அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும்
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். மக்கள் நம்பிக்கை பெற்று மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வருவார், என்றார்.

Views: - 309

0

0