‘காலாவதியான மருந்துகளை கொள்முதல் செய்து ரூ.16 கோடி முறைகேடு : பொது கணக்குகள் குழுத் தலைவர் குற்றச்சாட்டு..!!

Author: Rajesh
30 March 2022, 12:44 pm
Quick Share

மதுரை: காலாவதியான மருந்துகளை கடந்த 2018-19ம் ஆண்டுகளில் 16 கோடி ரூபாய்க்கு மருந்துகள் கொள்முதல் செய்து பண விரயம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது கணக்குகள் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குகள் குழுத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை தலைமையில் இன்று மதுரையில் ராஜாஜி மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், மாணவர்கள்,  மாணவிகள் தங்கியுள்ள விடுதிகள், மேம்பாலம், சாலைகள் அனைத்தையும் ஆய்வு செய்து பார்வையிட்டனர். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் கூட்டரங்கில் இது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை கூறுகையில், கடந்த காலங்களில் மத்திய கணக்காயர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை இன்று விவாதிக்கப்பட்டது. அவை இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்கவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறையில் மருந்துகள் கொள்முதல் செய்ததில், 2018- 2019 ஆண்டுகளில் இவ்வளவு மருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அளவுகள் உள்ளது, அதை மீறி 16 கோடி ரூபாய்க்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  அந்த அதிகாரிகளின் மீது ஏற்கனவே நடவடிக்கைகள் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆய்வில் முடிவு எடுத்துள்ளோம். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்னை வரவழைத்து சட்டப்பேரவை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளோம். இது திட்டமிட்டு அரசு பணத்தை விரையம் ஆகவேண்டும் என்று நடந்த சதி, காலாவதி ஆவதற்குள் அவற்றை வெளியேற்றியுள்ளனர் என்பது குறித்து தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகள் அனைத்தும் மத்திய தணிக்கை குழு கண்டுபிடித்து தகவல் அதிலேயே 2018 – 2019 ஆண்டுகளில் கண்டுபிடித்து கூறியுள்ளனர், அவற்றையெல்லாம் சுகாதாரத்துறை செயலாளர் முன்னிலையில் விசாரிக்கவுள்ளோம்,  

வருவாய்த்துறை ஒரு பள்ளிக்கு இடத்தை கொடுத்துவிட்டு அதற்கு சரியான வரியை வசூலிக்காமல் பல கோடிகள் விரயமாகி உள்ளது. அவற்றிற்கான வரியை முறையாக வாங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி கூறியுள்ளார்.  முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் சரியாக அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் அவற்றை முறையாக பயன்படுத்தவில்லை, அவர்களுக்கு ஒதுக்கிய பணத்தை மீண்டும் அரசிடமே திருப்பி அனுப்பியுள்ளது. தேவையானவர்களுக்கு சென்றடையாமல் மக்களை ஏமாற்றி உள்ளனர்.  மருத்துவ கொள்முதலில் அரசியல்வாதிகள் தலையிட வாய்ப்பில்லை. காலாவதியான மற்றும் முறையான தேதிகள் இல்லாத மருந்துகளை அதிகம் வாங்கி உள்ளனர். இந்த அதிகப்படியான மருந்து கொள்முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது.

Views: - 826

0

0