நல்லா இருக்கு உங்க சட்டம் : ரூ.100 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது… ரூ.2.10 கோடி ஊழல் செய்த அதிகாரி பணியிடமாற்றமா? அன்புமணி கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 10:12 pm
Anbumani Question - Updatenews360
Quick Share

போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு பணியிடமாற்றம் மட்டும் தண்டனையா என பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமா அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதற்கு காரணமான துணை ஆணையர் நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ரூ.35 லட்சம் பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்தபோது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது.

பதவி உயர்வுக்கு மேலும் 35 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி வசூலித்துள்ளது தொடர்பாக நடராஜன் மீது ஊழல் தடுப்பு காவல்துறை வழக்கும் பதிவு செய்துள்ளது. மேலும் அவர் 2019ம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்டிஓ ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் சோதனையிட்டு ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றி வழக்கு பதிந்துள்ளது.

லஞ்சப் பணத்துடன் சிக்குபவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் எந்த சோதனையும் செய்யாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இடமாற்றம் செய்து அந்த அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார்.

100 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்படுகிறார், ஆனால் ரூ.2.10 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால் அது ஊழலை ஒழிக்க உதவாது, ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதோடு கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 737

0

0