MID NIGHT மசாலா மாதிரி 3 மணிக்கு வராங்க… செந்தில் பாலாஜியை அண்ணாமலை குறிவைக்கக் காரணமே இதுதான் : ஆர்எஸ் பாரதி பரபர பேச்சு!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 6:16 pm
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சருக்குச் சொந்தமாக இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், திமுக அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது :- கொந்தளிப்புகளை உருவாக்க , காவல் துறைக்கு தகவல் சொல்லாமல் ஐ.டி ரெய்டுக்கு சென்றுள்ளனர். எத்தனை சோதனைகள் நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை. மிட் நைட் மசாலா போன்று இரவு 3 மணிக்கு ரைய்டுக்கு வந்துள்ளனர். வருவது கொலைகாரனா..? போலீசா..? கொள்ளைகாரனா..? எப்படி தெரியும். வருமான வரித்துறை சோதனை பற்றி கவலை இல்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இதை பார்த்து அஞ்சப்பட்டோம். செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார். தமிழகத்திற்கு வரும் முதலீடு செய்திகளை மழுங்கடிக்கும் விதமாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.

கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி 27 கிமீ நடந்து தெருத்தெருவாக ஓட்டு கேட்டார். அனுமன் பெயரை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க நாடகம் நடத்தினார். பதுக்கிய ரூ.2000 நோட்டுகளை எல்லாம் விநியோகித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த செய்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. அதை திசைத்திருப்பவே ரெய்டு நடக்கிறது, எனக் கூறினார்.

Views: - 229

0

0