ஆளுநர் மாளிகையை உளவு பார்த்த திமுக அரசு…? ஆதாரங்களுடன் டெல்லி சென்ற ஆர்.என்.ரவி : CM ஸ்டாலினுக்கு புது நெருக்கடி!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 3:54 pm
Quick Share

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்று பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார் அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் ஃபனிந்த ரெட்டி ஆகிய 3பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனர் முதல்வர் மீது புகார் என்றதும், இயக்குனர் என்னை சந்திக்க மறுத்துவிட்டதாகவும், அதன்பின் லஞ்ச ஒழிப்பு துறையின் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என குற்றம் சாட்டினர்.

மேலும், முதல்வர் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைப்பதாகவும், அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை பல்வேறு சிறப்பு காட்சிககுக்கு அனுமதி அளித்து, தன்னுடைய மகன் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு சிறப்பு காட்சிக்கான உத்தரவை வழங்கியது, லஞ்ச ஒழிப்பு சாட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால், விசாரணை நடத்தக்கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தாக தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

முதல்வரின் பினாமி என்பதற்கான ஆதாரங்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் எல்லா திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. ஆனால், சிறப்பு காட்சிகளுக்காக அரசாணை இரவு தான் வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன் 5 சிறப்பு காட்சிகள் வெளியாகிவிட்டன. சட்ட விரோதமாக 950க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. எனவே, இதற்கான ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்ததாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், ஆளும் ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு துளி நம்பிக்கையும் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், லஞ்ச ஒழிப்பு துறைக்கு முறையான அமைச்சர் ரகுபதி தான், ஆனால் ரகுபதி மீது உச்ச நீதிமன்றத்தில் சொத்துகுவிப்பு வழக்கு உள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள அமைச்சரே துறை அமைச்சராக உள்ளதாக தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கந்தசாமி ஆளும் வர்க்கத்தினரை பாதுகாக்க கூடியவராக உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, 98 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடர்பாக மத்திய கணக்காயர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், ஆனால் அந்த புகார் மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.

தமிழக அரசு ஆளுநர் மாளிகையில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகளை வைத்து ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பதாக ஆளுநருக்கு தகவல் வந்துள்ளதாகவும், அரசு அதிகாரி அளித்த வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் 2020ஆம் ஆண்டு அதிமுக அமைச்சர்கள் மீது புகார் அளித்துவிட்டு செய்தியாளர்கள் சந்தித்தபோது, திருத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் கீழ் நேரடியாக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு அதிகாரம் உள்ளது தெரிவித்தார்.

இந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஸ்டாலின் மீதும் உதயநிதி மற்றும் ஃபனிந்தர் மீதும் வழக்கு பதிவு செய்ய கோரி ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க உள்ளேன் என்றார். மேலும், சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் அனைத்தையும் செய்வேன், என தெரிவித்தார்.

Views: - 397

0

0