பூணூல் அணிந்து செல்ல மட்டும் அனுமதி.. ஹிஜாப் அணிய மட்டும் தடையா..? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
16 May 2022, 4:56 pm
CM stalin - seeman - updatenews360
Quick Share

சென்னை : கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- கள்ளக்குறிச்சியிலுள்ள களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வெழுதச்சென்ற மாணவிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் சென்னை, தாம்பரத்திலுள்ள சங்கர வித்யாலயா பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்குச்சென்ற பெண்ணின் ஹிஜாப்பை, அப்பள்ளி நிர்வாகம் அகற்றக்கோரிய நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியிலும் அதேபோன்றதொரு நிகழ்வு அரங்கேறியிருப்பது தேவையற்ற சலசலப்பை உருவாக்குகிறது.

உடலில் பூணூல் அணிந்துசெல்வதற்கும், நெற்றியில் திருநீறு பூசிச்செல்வதற்கும், கையில் கயிறு அணிந்துசெல்வதற்கும், ருத்திராட்சை அணிந்துசெல்வதற்கும் கல்விக்கூடங்கள் எவ்விதத் தடையுமிடாதபோது, இசுலாமியர்களின் ஹிஜாப் உடைக்கு மட்டும் தடையிடுவது எதனால்? எல்லோரும் அவரவரது மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்குக் கல்விக்கூடங்கள் அனுமதிக்கும்போது இசுலாமியர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சமத்துவமற்ற அணுகுமுறை இல்லையா?.

ஹிஜாப் அணிந்துகொண்டு தெர்வெழுதச்செல்வதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் பெருமக்கள், ஹிஜாப் அணிந்துகொண்டு வாக்குச்செலுத்தும்போது எதிர்ப்புத் தெரிவிக்காததேன்? அப்போது ஹிஜாப் உடை சிக்கலாகப்படவில்லை; இப்போது மட்டும் கண்ணை உறுத்துகிறதா? இசுலாமியர்களின் வாக்கு இனிக்கிறது; அவர்களது உரிமை கசக்கிறதா? அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்கள் பெரும் மதப்பூசலை உருவாக்கி, சமூக அமைதியைக் குலைத்து, மதவெறியாட்டமாடியதன் விளைவாக, ஏறக்குறைய 33,000 மாணவிகள் தேர்வெழுத இயலாதுபோன பெரும் அவலமானது நிகழ்காலச்சாட்சியாக இருக்கும் நிலையில், அத்தகைய கோரச்சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாவண்ணம் தடுத்து, மதவெறிக்கூட்டத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 583

0

0