செப்., மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் விநியோகம்
28 August 2020, 7:33 pmசென்னை : செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான டோக்கன் நாளை முதல் 4 நாட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அமுதம் நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது செப்டம்பர் மாத அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் பயனாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு, வழங்கும் நாள், நேரம் போன் விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை ஆகஸ்ட் 29, 30, 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தினங்களில் வீடு தோறும் சென்று நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட
வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செப்டம்பர் 3ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டும். மேலும், அட்டைதாரர்களுக்கு டோக்கன்களில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றும், டோக்கனில் குறிப்பிடப்படாத நேரத்தில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்பதையும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் போது தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு
நபர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.