இந்து மதம் குறித்து அவதூறு… திமுக எம்பி ஆ.ராசாவை கட்சியில் இருந்து நீக்குவாரா CM ஸ்டாலின்..? பாஜக கேள்வி..!

Author: Babu Lakshmanan
13 September 2022, 1:08 pm
Quick Share

இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இந்து மதம் குறித்து அவதூறாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பல கேள்விகளை எழுப்பியள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- ‘ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது’ என்று திமுகவின் துணை பொது செயலாளர் அ.ராசா பேசுகின்ற ஒரு காட்சியை பார்க்க நேர்ந்தது.

இதை எப்போது பேசியிருந்தாலும் வன்மத்தை தூண்டுகிற மத துவேஷ பேச்சே. “எங்கள் கட்சியில் இருப்பவர்கள் 90 விழுக்காடு ஹிந்துக்கள் தான், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஹிந்து மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை உள்ளது”என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

திமுக தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, மு.க. ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் குறிப்பாக, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட பலரும் கடவுள் மீதும், ஹிந்து மதத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதோடு தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வழிபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

முக ஸ்டாலின் அவர்களுக்கு நம் ஒரே கேள்வி – அ.ராசாவின் கேள்விகள் பொதுமக்களுக்கானது என்றால், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா?

அல்லது விடுதலை மற்றும் முரசொலியை குறிப்பிட்டு பேசியுள்ளதால், அ.ராசாவின் கேள்விகள் திமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்றால், சொந்த கட்சி தொண்டர்களின் குடும்பத்தினர் மற்றும் தலைவரின் குடும்பத்தினரை இழிவுபடுத்தியதற்கு, திமுகவிலிருந்து நீக்குவாரா… பொது மக்களா? குடும்பமா? எதுவாகினும் உரிய நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 420

0

0