“மன்னிச்சிடுங்க, இனி இந்து மதம் குறித்து தவறா பேசமாட்டேன்”..! நீதிமன்றத்தில் சரண்டரான மோகன் சி லாசரஸ்..!
6 February 2021, 11:04 amஇந்துக் கடவுள் குறித்து அவதூறு தெரிவித்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி, இனிமேல் இந்துக் கடவுள்களை அவமதிக்க மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2016’ஆம் ஆண்டு சென்னையை ஒட்டி உள்ள ஆவடி பகுதியில் நடந்த ஒரு கிறிஸ்தவ மதபோதனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோகன் சி லாசரஸ், இந்து மதக் கடவுள்கள் மற்றும் இந்துக் கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
மோகன் சி லாசரஸ் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் கண்டங்களுக்கு ஆளானதை அடுத்து, மோகன் சி.லாசரஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மோகன் சி.லாசரஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மோகன் சி லாசரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற உள் அரங்கு கூட்டத்தில், பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு மோகன் சி.லாசரஸ் பதில் அளித்துள்ளார். யார் மத உணர்வையும் புண்படுத்துவது அவரது நோக்கம் இல்லை. பொது கூட்டத்தில் அவர் பேசவில்லை. ஒத்த கருத்துடையோர் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குதான் அவர் பதில் அளித்துள்ளார்.” என்று வாதிட்டார்.
பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் தான் தெரிவித்த கருத்துகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். தயாராக இருப்பதாக மோகன் சி லாசரஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் கூறியிருந்தார்.இதை ஏற்றுக்கொள்வதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறியதாவது :-
பல்வேறு மதங்களும், பன்முக கலாசாரமும் நமது நாட்டின் தனித்துவமாக உள்ளன. எனவே நாட்டின் இந்த பன்முகத் தன்மைக் கொண்ட மதம், கலாசார உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதேநேரம் ஒவ்வொரு மதபோதகர்களையும் ஏராளமானவர்கள் பின்தொடர்கின்றனர்.
அப்படியிருக்கும் போது, மதபோதகர்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக மற்ற மதங்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது. எந்தவொரு மதத்தையும், கடவுளையும் தவறாக சித்தரித்து கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டியது இல்லை என இயேசு நாதரே கூறியிருக்கிறார்.
எனவே மதபோதனைகள் மற்ற மதத்தினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மனுதாரர் மோகன் சி லாசரஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
இந்து மதம் குறித்து தொடர்ந்து மாற்று மதத் தலைவர்களால் அவதூறு பரப்பப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு எல்லாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பு சரியான பதிலாக இருக்கும் என மதநல்லிணக்கவாதிகள் தெரிவித்துள்ளனர்.
0
0