தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11ம் தேதி வெளியீடு : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
3 March 2021, 11:22 amவரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை வரும் 11ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- என்னுடைய பிறந்தநாளில் குவிந்த வாழ்த்துகள் இதமளிக்கின்றன! அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி! அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்று கிராமசபைக் கூட்டங்களை தி.மு.கழகம் வெற்றிகரமாக நடத்தியது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” செயல்திட்டம்
செயல்படுத்தப்பட்டது.
அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு புது வாழ்வு தரும் திட்டங்களை முன்வைக்கும் இலட்சியப் பிரகடனம் திருச்சியில் மார்ச் 7 அன்று வெளியிடப்படும்! பிரகடனத்தின் இரண்டு முக்கிய அம்சங்களில் ஒன்று, வளர்ச்சிக்கான ஏழு முக்கிய வழிகாட்டுதல்கள்; மற்றொன்று, தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்ட ஆவணம்.
பல்துறை அறிஞர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் இலக்கு துல்லியமாக
வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும் வீடு வீடாக கொண்டு போய்ச்
சேர்க்க வேண்டும்!
தேர்தலில் கதாநாயகனாக விளங்கும் தேர்தல் அறிக்கையும் இறுதி வடிவம் பெற்று வருகிறது; மார்ச் 11ம் தேதி வெளியிடவிருக்கிறேன்! திருச்சியில் மார்ச் 7 அன்று திரண்டிடுவோம்; வெற்றியினை உறுதிப்படுத்திடச் சூளுரைப்போம்!, என தெரிவித்துள்ளார்.
0
0