நடுரோட்டில் ஆசிரியருக்கு கொலை முயற்சி…பள்ளி மாணவன் கத்தியால் வெட்டிய கொடூரம்: விருத்தாச்சலத்தில் பயங்கரம்..!!

Author: Rajesh
27 March 2022, 12:56 pm
Quick Share

விருத்தாச்சலம்: அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையை பள்ளி சீருடையணிந்த மாணவன் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி ரேகா (வயது 42) விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரின் வீடு பள்ளிக்கூடம் அருகேயே இருப்பதால், தினமும் பள்ளிக்கு நடந்தே வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆசிரியை ரேகா, மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு மீண்டும் நடந்து வந்துகொண்டு இருந்த நிலையில், பள்ளி சீருடையணிந்த மாணவன் ஒருவன் நடுரோட்டில் வைத்து ஆசிரியையின் தலையில் பேனா கத்தியால் 3 முறை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த ஆசிரியை கூச்சலிடவே, பதறிப்போன அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.

இதனைக்கண்ட மாணவன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், ரேகாவை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆசிரியைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பள்ளிக்கு அருகிலேயே ஆசிரியையை மாணவன் ஒருவர் கத்தியால் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 884

0

0