தமிழகத்தில் இனி வாராவாரம் பூஸ்டர் தடுப்பூசி முகாம்… என்ன கிழமை தெரியுமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சூப்பர் அறிவிப்பு
Author: Babu Lakshmanan18 January 2022, 2:37 pm
சென்னை : தமிழகத்தில் இனிவரும் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வீடு தேடி சென்று செலுத்தும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மானகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 92,522 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்கள் என்றும், ஜனவரி இறுதிக்குள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இனி பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் 600 இடங்கலிலும், சென்னையில் 160 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக கூறிய அவர், கொரொனா பாதிப்பு கடந்த வாரத்தில் நாள் ஒன்றிற்கு 2000 அளவிற்கு உயர்ந்து இருந்தது. நேற்று கொரொனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 500 அளவிற்கு குறைந்துள்ளது என்றும், நோய் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் அதிகமாக இருக்கிறது, என்றார்.
அதேபோல் மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும், என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேசினார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 41 ஆயிரம் பேருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், உலகம் முழுவதும் தடுப்பூசி கட்டாயம் என்பது எங்கேயும் இல்லை. பொது சுகாதார விதிகள் அடிப்படையில் தான் திரையரங்கு, உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் பொது தடுப்பூசி கட்டாயம் என்று கூறியிருக்கிறோம் என விளக்கமளித்தார்.
அதன் தொடர்ச்சியாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள சமூகநல கூடத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்கீரினிங் செண்டர் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
0
0