அரசு பாரில் சட்டவிரோத மதுவிற்பனை எப்படி..? திட்டமிட்ட முறைகேடுகளால் தொடரும் உயிர்பலி ; திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 11:08 am
Quick Share

தஞ்சையில் அரசு பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை குடித்த 2 பேர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில், உரிய நேரத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானம் அருந்திய திரு குப்புசாமி , திரு விவேக் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள்,அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும்,வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்பதனை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

முறையற்ற மது விற்பனையால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசே ஏற்று மதுவிற்பனையை நடத்தி வருகிறது‌, அப்படி இருக்கையில் சமீபகாலமாக அரசு மதுபான விற்பனையில் பல்வேறு திட்டமிட்ட முறைகேடுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருவதையும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

நான் பலமுறை இத்துறையில் நடந்துவரும் முறைகேடுகளை எடுத்துரைத்தும் வழக்கம்போல் இந்த அரசு மக்களின் உயிர் காக்க அக்கறையின்றி மெத்தனம் காட்டி வருகிறது.ஆகவே தஞ்சாவூர், செங்கல்ப்பட்டு மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற போலி மதுபான-கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் உரிய நீதி வேண்டியும், இதனை உரிய விசாரணைக்கு உடனே உட்படுத்த வேண்டியும் மாண்புமிகு ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 273

0

0