தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி : அவசர அவசரமாக தஞ்சை செல்லும் CM ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 8:52 am
Quick Share

தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் தாக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம்.

மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தேரினை எடுத்து இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தேரின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தஞ்சை செல்ல இருக்கிறார். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் அவர், விபத்து எப்படி நடந்தது..? என்பது குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார்.

Views: - 720

0

0