கண்துடைப்பு கூட்டத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம்.. அழைப்புக்கு நன்றி : முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 9:55 pm
annamalai thanks - Updatenews360
Quick Share

நாளை நடைபெறும் அனைத்து கட்சி கண்துடைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொள்கிறோம் என முதல்வருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாளை தமிழக அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்கு நன்றி. நாளை அனைத்து கட்சி கண்துடைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொள்கிறோம்.

நீட் தேர்வு தான் உண்மையான சமூக நீதிக்கான அடையாளம் என்பதை முதல்வர் இன்னுமா உணரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்புக் கொடுக்க தமிழக பாஜக தயாராக உள்ளது. உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும், மக்களை ஏமாற்றும் பிரச்சினைகளுக்கு துணை நிற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Views: - 1040

0

0