சக மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து காதலுனுக்கு அனுப்பிய விவகாரம் : பல்கலை.க்கு 24ம் தேதி வரை விடுமுறை.. 3 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 11:48 am
Chandigarh University - Updatenews360
Quick Share

பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவிகள், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

வீடியோ எடுத்த மாணவி கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டிய பிறகு, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

அந்த பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. அதை கேள்விப்பட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியதும், அதை அந்த வாலிபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் தெரிய வந்தது. அந்த வாலிபரின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஆனால், ஒரு மாணவியை தவிர, பிற மாணவிகள் ஆபாசமாக வீடியோ எடுக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் நல இயக்குனர் அரவிந்த் சிங் காங் மறுத்தார். பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவி மனிஷா குலாதி, பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோரின் கவலை எனக்கு புரிகிறது. போலீஸ் விசாரணை நடக்கிறது. அந்த மாணவி, ஏன் வீடியோ எடுத்தார் என்பது ஆழ்ந்து விசாரிக்கப்பட வேண்டும். அவர் வீடியோ எடுத்தாரா, இல்லையா என்பது விசாரணையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பெண்கள் விடுதி வார்டன் ராஜ்விந்தர் கவுரை சஸ்பெண்ட் செய்தது.

தொடர்ந்து பல்கலைக்கழகமும் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் காணப்பட்ட விடுதி வார்டன், இந்த விஷயத்தைப் பற்றி உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியபோது அவர் மாணவியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பெண் மாணவியின் தொலைபேசியில் நான்கு வீடியோக்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் இவை அனைத்தும் இந்த பெண்ணின் காதலனுக்கு அனுப்பியவை என்று மொஹாலியின் உயர் போலீஸ் அதிகாரி நவ்ரீத் சிங் விர்க் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுவது போல் பல்கலைக்கழகத்தில் தற்கொலை முயற்சி எதுவும் நடக்கவில்லை.

விடுதி குளியலறையில் மற்ற பெண்களின் ஆபாச வீடியோக்களை அந்த மாணவி எடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்ற காவல்துறையின் கருத்துக்களை சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் ஏற்க மறுத்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட மானவி சிம்லாவில் வசிக்கிறார் அவரையும் அவரது காதலரையும் போலீசார் கைது செய்தனர்.

23 வயதான காதலர் மேத்தா ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். பேக்கரி ஒன்றில் பணிபுரியும் இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Views: - 388

0

0