‘தமிழ்ல மந்திரம் சொல்லலனா.. கல் எடுத்து அடிப்பேன்’… பூஜை செய்து கொண்டிருந்த புரோகிதர்களுக்கு மிரட்டல் விடுத்த நபர்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
9 November 2022, 2:12 pm
Quick Share

தமிழில் மந்திரம் செய்யச் சொல்லி புரோகிதர்களுக்கு நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவில்களில் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியிலேயே அர்ச்சனை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படியிருக்கையில், தமிழகத்தில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும், இன்னும் முழுமையாக இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், தமிழில் மந்திரம் செய்யச் சொல்லி புரோகிதர்களுக்கு நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சில சாதிப் பெயர்களை சொல்லி, எங்களுக்கு தமிழ் தான் தெரியும், தமிழிலேயே மந்திரம் சொல்லுங்கள் என்று அந்த நபர் கூறுகிறார். மேலும், தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கல்லை கொண்டு அடிப்பேன் என்றும் அவர் மிரட்டுகிறார்.

இதனால், பூஜைக்கு வந்த புரோகிதர்கள் செய்வதறியாமல் திகைத்து போயினர். மேலும், முதலில் சமஸ்கிரத மொழியில் முடித்து விட்டு, பின்னர் தமிழில் சொல்வதாக அவர்கள் பதில் அளித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த நபர், தமிழில் மந்திரம் சொல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

ஒருகட்டத்தில் அமைதி காத்து வந்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நபரின் இந்த செயலுக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பாஜக பெண் நிர்வாகியான காயத்ரி ரகுராம், இந்த வீடியோவை பகிர்ந்து, “ஏன் பிராமணர்களை பூஜைக்கு கூப்பிட்டு பதற்றத்தை உருவாக்குகிறார்கள்? பூஜை செய்ய அடுத்த முறை பெரியாரை அழைக்கவும். தமிழ் பூஜை பற்றி சொல்லி தமிழ் பூஜை செய்வார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 611

0

0