‘சும்மா கிடையாது.. ஆளுமைக்கு கிடைத்த பரிசு’ ; இபிஎஸ்-க்கு திடீரென புகழாரம் சூட்டிய திருமாவளவன்..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 6:21 pm
Quick Share

அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியானது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம் உள்பட நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஆட்டம், பாட்டத்துடன் காணப்படும் அவர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும்
பாஜக’வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருமாவளவனின் இந்தப் பாராட்டு பத்திரம் அரசியல் நோக்கர்களை சற்று உற்று நோக்க வைத்துள்ளது.

Views: - 254

0

0