தூத்துக்குடியில் மேலும் ஒரு துயர சம்பவம் : நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை : ரவுடி துரைமுத்து என்கவுண்டர்..?
18 August 2020, 3:58 pmதூத்துக்குடி : தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை அருகே தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுப்பதற்காக, போலீசார் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மணக்கரை பகுதிக்கு போலீசார் சென்றதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த ரவுடி கும்பல் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த காவலர் சுப்ரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய முயன்ற போது, அந்த ரவுடி கும்பல் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி துரைமுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி துரைமுத்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பிரபல ரவுடி என்பதும், ஏற்கனவே, 2016-17ல் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் இவரை போலீசார் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.