வீடு இடிந்து விழுந்து விபத்து… கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு.. தூங்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்..!

Author: Babu Lakshmanan
3 May 2022, 9:00 am
Quick Share

தூத்துக்குடி : தூத்துக்குடி அண்ணாநகரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணாநகர் 3வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன் மனைவி காளியம்மாள். இவரது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா. திருமணம் முடிந்து பத்து மாதம் ஆகிறது. கர்ப்பிணியான இவரை கடந்த வாரம் வளைகாப்பு நடத்தி அழைத்து வந்து உள்ளனர். இவர்கள் வசித்து வரும் வீடு சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகும்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீடு திடீரென இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 757

0

0