பேரரசர் போல தளபதி… சிற்றரசர் போல உதயநிதி… திருச்சியில் தொடங்கியது வீண்போகாது ; புகழ்ந்து தள்ளிய அமைச்சர் கேஎன் நேரு!!

Author: Babu Lakshmanan
29 December 2022, 4:34 pm
Quick Share

திருச்சி ; திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் அமைச்சர் கேஎன் நேரு புகழ்ந்து பேசினார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 20,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :- இளைஞரணி செயலாளராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக என ஏராளமான முறை திருச்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கிய நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் தான் முதல்முறையாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் தன் கையால் நிதி உதவியை வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின். சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமான நின்று கொண்டு மக்களுக்கு உதவியை வழங்கியவர்.

இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களை திருச்சியில் தொடங்கியது எங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. திருச்சியில் ஆரம்பித்த எதுவும் வீண் போனதல்ல. நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். பேரரசர் போல் தளபதி, சிற்றரசர் போல் உதயநிதி இங்கு வந்துருக்கிறீர்கள்.

இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், திருச்சிக்கென புதிய பேருந்து நிலையம், அறநிலையத்துறை மூலம் கோயில்கள் செய்யப்பட்டு வரும் பணிகள், ஈரடுக்கு மேம்பால சாலை, புதிய பாலங்கள், முசிறியில் குடிநீர் திட்டங்கள், புதுக்கோட்டையில் குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள் என எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் திருச்சியில் பொழுகுபோக்கு இல்லாத காரணத்தால், வனத்துறை மூலம் வனவிலங்கு காட்சி சாலை அமைப்பதற்கான முயற்சியும் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மிகமுக்கிய நகரமான திருச்சியில், அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

Views: - 483

0

0