அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்.. பதவியேற்பை தொடர்ந்து 9 அமைச்சர்களின் இலாகா மாற்றம்..? வெளியாகப் போகும் முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 December 2022, 10:22 am
Quick Share

சென்னை : ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, அரசியலில் தீவிரம் காட்டி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முடிவு செய்து, தேதி மற்றும் நேரம் என அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு, இதற்கான பரிந்துரை ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பரிந்துரையை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நல்ல நேரமான 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா தொடங்கியது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார்.

பின்னர், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களோடு கூட்டாக புகைப்படம் எடுத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக பதவியேற்ற அவருக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பை தொடர்ந்து, ஒன்பது அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்படும் என தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 18 மாதங்களாக அமைச்சரவையில் எந்தவித விரிவாக்கம் செய்யவில்லை. சில அமைச்சர்கள் இலாகா மட்டும் மாற்றப்பட்டன.

இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் உள்ள கூட்டுறவுத் துறை, அமைச்சர் பெரியகருப்பனுக்கும், அவரிடமுள்ள ஊரக வளர்ச்சித் துறை பெரியசாமிக்கும் மாற்றித் தரப்பட இருப்பதாகவும், கே.ராமச்சந்திரனிடம் உள்ள வனத்துறை, மதிவேந்தனுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமுள்ள சுற்றுலாத் துறை ராமச்சந்திரனுக்கும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமியிடம் உள்ள, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மட்டும், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் கூடுதலாக வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் உள்ள இளைஞர் நலன், விளையாட்டு துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி துறை அமைச்சர் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒரு துறை ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 629

0

0