பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்று ஓட்டுப்போட்ட ஓட்டுநர்… ஸ்டிரெட்சரில் வந்து வாக்களித்த மூதாட்டி… ஜனநாயகம் போற்றும் வாக்காளர்கள்…!!

Author: Babu Lakshmanan
19 February 2022, 2:06 pm
Quick Share

தர்மபுரி : பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய, 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு சென்ற தனியார் பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போது நடந்து வரும் வேலையில், மல்லாபுரம் 5வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (35). இவர், தனியார் பேருந்து ஓட்டுநர் வேலை செய்து வருகிறார் இன்று அதிகாலை பணிக்கு சென்ற ஸ்ரீதர், பாலக்கோட்டில் இருந்து சேலத்திற்கு பொதுமக்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.

செல்லும் வழியில் பொ.மல்லாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் வந்தவுடன், பேருந்தில் இருந்த பயணிகளிடம், “என்னுடைய ஜனநாயக கடமையை செய்து விட்டு வருகிறேன். பத்து நிமிடம் பொறுத்து இருங்கள்,” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

இதை கவனித்த பயணிகள், “நீங்கள் ஓட்டளித்து வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம், நீங்கள் வாக்களித்துவிட்டு வாருங்கள்,” என்று அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தன்னுடைய ஜனநாயக கடமையை முடித்துவிட்டு வந்த ஓட்டுநர் ஸ்ரீதர், தன்னுடைய பேருந்து பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

பணியின் போது கூட பயணிகளிடம் பக்குவமாகக் கேட்டுவிட்டுச் சென்று வாக்களித்து ஓட்டுநரின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.

இதேபோல், ஶ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தம்மாள் என்ற பெண்மணி உடல்நலம் சரியில்லாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஜனநாயக கடமையாற்றிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்து சென்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Views: - 602

0

0