பிரதமர் மோடியுடன் கைகுலுக்கிய CM ஸ்டாலின்.. சனாதன எதிர்ப்பை மறந்ததா திமுக..? டக்கென திருமாவளவன் கொடுத்த விளக்கம்!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 1:53 pm
Quick Share

பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவி விட்டது என சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை இராமாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அனைவரும் ஒரே நேரத்தில் நோம்பு துறந்தனர்.நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது :- தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதவை நிராகரிக்க முடியாது. காலம் தாழ்த்த முடியாது என்பதால் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுதமிழ்நாட்டு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் கிடைத்த வெற்றி.

ஆளுநர் அவரின் பதவியை, பொறுப்பை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டரை போல பேசியும் செயல்பட்டும் வருகிறார். அவர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுகிறார். சனாதான கொள்கைகளை உயர்த்தி பிடிக்கிறார். அப்படிப்பட்ட ஆளுநரின் அனுகுமுறைகளை கண்டித்து வருகின்ற 12 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் ஆளுநர் மாளிகை முன்பு நடைப்பெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். இந்திய அரசு ஆளுநர் ரவியை தமிழ்நாட்டிலிருந்து திரும்ப பெற வலியுறுத்துகிறோம்.

ஆளும் கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ, சட்ட வரையறைகளின்படியே பிரதமரை வரவேற்கும் முறையில் திமுக செயல்பட்டது. அதே நேரத்தில் ஆளுநர் மற்றும் மோடியின் ஜனநாயகவிரோத போக்கினை மிக வெளிப்படையாகவும், வரம்பு மீறாமலும் கண்டிக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். தமிழக முதல்வர் தனது பிறந்தநாளில் பாஜகவை வீழ்த்துவதே இலட்சியம் என உறுதிப்பட கூறியிருக்கிறார்.

எனவே பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவி விட்டது என சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை. மேலும், பல்வீர் சிங் விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக எதிர்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முறைப்படி,நீதிப்படி சபாநாயகர் செயல்படுவார், என நம்பிக்கை தெரிவித்தார்.

Views: - 260

0

0