ஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…!!
27 January 2021, 6:27 pmசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஜெயலலிதா காலமான நிலையில் 2017ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரின் போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு ஜெ. தீபா, தீபக் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், இழப்பீட்டுத் தொகை செலுத்தியதால் போயஸ் தோட்ட வீடு அரசு உடைமையானது என்றும், இழப்பீட்டுத் தொகை பெற வேண்டிய உரியவர்கள் சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நாளை (ஜன.,28) ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது.
அப்போது, மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால், பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
0
0
1 thought on “ஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…!!”
Comments are closed.